விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

மதராசபட்டினம் - நரசய்யாவின் புதிய புத்தகம்

2006-10-29 by விருபா - Viruba | 0 கருத்துகள்
1975ல் தமிழ்நாடு அரசு வெளியீடாக வந்த "தமிழ்நாட்டுத் தொல் பழங்கால வரலாறு" உட்பட பல பழைய நூல்களில் இருந்தும், மற்றும் ரிக்வேதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, பெருங்கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, வால்மீகி ராமாயணம், கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, கம்பராமாயணம் முதலியவற்றில் உள்ள குறிப்புக்களின் உதவியுடனும், தொல்பொருள் சான்றுகளை மேற்கோள் காட்டியும், எழுத்தாளர் நரசய்யா இலகு தமிழில், இந்திய கடல் வணிகம் பற்றிய பல பயனுள்ள தகவல்ளை உள்ளடக்கி எழுதிய, "கடல்வழி வணிகம்" என்னும் புத்தகம் கடந்த வருட இறுதியில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நரசய்யா அவர்கள், தமிழ் நாட்டின் தலைநகராமாக தற்போது விளங்கும் சென்னை நகரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். 1600 முதல் 1947 வரையிலான பல நிகழ்வுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. "மதராசபட்டினம்" (ஒரு நகரத்தின் கதை 1600 - 1947) என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகம் விரைவில் வெளியாவுள்ளது.

மதராசபட்டினம்

A4 அளவு தாளில் 250 பக்கங்களுடன், தரமான தாள்களுடன், நேர்த்தியான கட்டமைப்புடன் இப்புத்தகம் அமையவுள்ளது.

சென்னை தினமாக கொண்டாடப்படும் ஆகஸ்ட்டு 22 அன்று (2006.08.22) இதனை வெளியிடுவதென்று விருப்பத்துடன் இதனை எழுதத் தொடங்கிய எழுத்தாளர் நரசய்யாவின் தேட்டையில் கிடைத்த அளவிற்கதிகமான தகவல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதியதில் தாமதமாகியதாக கூறினார்.

"கடல்வழி வணிகம்" புத்தகத்தை பதிப்பித்த பழனிப்பா பிரதர்ஸ் நிறுவனமே இப்புதிய புத்தகத்தையும் வெளியிடவுள்ளது.


சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்

2006-10-27 by விருபா - Viruba | 1 கருத்துகள்
"ஊனம்.... உனமல்ல.

இன்று உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் ''மாற்றுத்திறன் கொண்டவர்கள்'' என்ற மகத்தான சொல் அரங்கேறியுள்ளது. அவர்கள் அங்கம் பங்கப்படாத எந்த மனிதருக்கும் இளைத்தவரோ அல்லது சளைத்தவரோ அல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார்கள்.

இல்லாததை எண்ணி ஏங்காமல் இருப்பதை வைத்துக்கொண்டு பல சாதனைகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்."

என்கிறது இந்நூல்.

இதனை எழுதியவர் கவிஞர் ஏகலைவன்.

கவிஞர் ஏகலைவன் - விபத்தில் காலை இழந்தவர் - கவிஞர், கட்டுரையாளர், M.A தமிழ் படித்துக்கொண்டே இனிய நந்தவனம், உதவிக்கரம், தன்னம்பிக்கை, ஊன்றுகோல் போன்ற இதழ்களின் செய்தி சேகரிப்பாளரா உள்ளார். பல கவிதைப் போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசில்களைப் பெற்றுள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

"பயண வழிப்பூக்கள்" என்னும் கவிதை நூலை எழுதியுள்ளார். ஊனமுற்றோரை மையப்படுத்தி வெளிவரும் "உதவிக்கரம்" மாத இதழில் பல ஊனமுற்றவர்களிடம் "பீனிக்ஸ் மனிதர்கள்" என்னும் தலைப்பில் பேட்டி கண்டு எழுதியவற்றை "சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்" என்னும் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

வாய்ப்புகள் கிடைக்காமலேயே தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பலரதும் பேட்டிகள் அமைந்துள்ளன. தங்களிடம் பரிதாபம் காட்டாமல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு தாருங்கள் என்றவாறே அனைவரினதும் பொதுவான வேண்டுகோளாக உள்ளது.

சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்

***புத்தகத்தில் இடம் பெற்ற சிலருடைய தகவல்கள் இங்கே சுருக்கமாக...***


குட்டி - திரைப்படத்தில் நடித்தவர்.

ஜனாப் ஷாஜகான் - பார்வையற்றவர் - B.A, M.A, B.Ed என்று மூன்று பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, M.Phil இற்காக வைரமுத்துவின் பாடல்கள் மீதான ஆய்வினை மேற்கொண்டுள்ளார், கூடவே I.A.S தேர்விற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

ரஜனிகாந் - பார்வையற்றவர் - சிறந்த நாவன்மை மிக்கவர், அரட்டை அரங்கம், வானமே எல்லை, அகடவிகடம் என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியுள்ளார்.

ம.கணேசன் - இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்டவர் - மாநில அளவிலான உடல் ஊனமுற்றோர் பிரிவில் ஆணழகன் போட்டியில் பங்கு பற்றி மிஸ்டர். தமிழ்நாடு பட்டத்தைப் பெற்றவர்.

மா.மோகனசுந்தரம் - நடக்க முடியாதவர் - M.A ஆங்குல இலக்கிய பட்டதாரி. பல்கலைக் கழக முதல் மாணவனாக தேர்ச்சியடைந்து, 2003-2004 ஆண்டிற்கான சிறந்த மாணவனுக்கான தங்கப் பதக்கத்தை முன்னாள் ஆளுநர் திரு ராம்மோகன்ராவ் அவர்களிடம் பெற்றவர்.

சுடரொளி லோகநாதன் - பூவிழுதல் என்னும் குறைபாட்டினால் கண்பார்வையை முற்றிலுமாக இழந்து, பார்வையற்றவர் பள்ளிகளில் படித்து, இலவச கண் சிகிச்சை முகாமில் வெளிநாட்டு மருத்துவர்களின் உதவியால் மீண்டும் பார்வை பெற்றவர்.
தனக்குப் பார்வை கிடைத்த நிலையில், ஏனைய பார்வையற்றவர்களுக்காக "சுடரொளி பார்வையற்றோர் மையம்" என்னும் அமைப்பை நிறுவி தன் வாழ்வை அதற்காக அர்ப்பணித்து வாழ்பவர். இன்று இவரது சுடரொளி மையத்தில் 40 உள்ளார்கள்.
பார்வையற்றோர் சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கு ஏதுவாக சாக்பீஸ் தயாரிப்பு, ஆபீஸ் கவர்கள் தயாரிப்பு, ஒயர் பின்னுதல் போன்ற தொழில்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

சரவணகுமார் - போலியோவினால் கால்கள் பாதிக்கப்பட்டவர் - சேலம் அரசு iti இல் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பட்டயப் பயிற்சியை முடித்தவர், DTP படித்துள்ளார், தற்சமயம் சிறு அளவிலான DTP வேலைகள்ச் செய்து கொடுக்கிறார்.

முத்து - பார்வையற்றவர் - மேடைப்பாடகர், கோவை ரிதம்ஸ், ஜனரஞ்சனி, ராகப்பிரியா போன்ற இசைக் குழுக்களில் பாடகனாகப் பங்கேற்றுள்ளார். தற்போது கோவை இந்திய விமானப் படைப் பிரிவில் பணியாற்றுகிறார்.

காட்டூர் சி.அருள்மொழி - போலியோவினால் கால்களையும் ஒரு கையையும் இளந்தவர் - வீட்டிலேய சிறு அளவிலான துணிக்கடையை நடத்தி வருகிறார், கவிஞர், காட்டூர் பகுதியில் உள்ள பிரச்சனைகள் பற்றி அக்கறையுள்ளவர். அதற்காக மனுச் செய்பவர்.

ஜெ.தீபா - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - இந்திய விளையாட்டுத்துறையின் உடல் ஊனமுற்றோர் பிரிவில் சர்வதேச தடகள வீராங்கனை, ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், பூப்பந்து போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்.
இதுவரையில் மூன்று சர்வதேசப் போட்டுகளில் பங்கு பற்றியுள்ளார். 21 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கல்ப பதக்கங்களைப் பெற்றுள்ளார். பல அமைப்புகளிடம் இருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழகத்தின் ஒரே சர்வதேச விளையாட்டு வீராங்கனை.

அன்பு - மின்சாரம் தாக்கியதில் பாதிக்கபபட்டவர், இரண்டு கைகளையும் இழந்தவர் - தற்சமயம் வேலைக்கு ஆட்களை வைத்து சுயமாக விளம்பர போர்டுகள் வரையும் தொழிலை செய்து வருகிறார்.

திருக்குறள் அ.சீனிவாசன் - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - பனை ஓலைகளைப் பதப்படுத்தி, அதில் திருக்குறள்களை எழுதியுள்ளார்.

கோவை எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - பிறவியிலேயே கை,கால்கள் இல்லாதவர் - பாடகர், இதுவரை 1500 இற்கும் அதிகமான கச்சேரிகளில் பங்கு பற்றியுள்ளார். அகில இந்தி வானொலி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று A கிரேடு வித்துவான் பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த வருடம் கலை மாமணி விருதும் பெற்றுள்ளார்.

மணிகண்டன் - இயந்திரத்தில் மாட்டுப்பட்டு கையை இழந்தவர் - கடைவீதியில் நடைபாதைக் கடை வைத்து விற்பனை செய்கிறார்.

ஜனார்த்தனன் - மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர். - வாயினால் ஓவியம் வரையும் இவர் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர்

ஜெயப்பிரியா - போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர் - தனியார் ITI இல் ஒன்பதாண்டுகாலமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றுகிறார்.

ஜனாப் ஷாதிக் பாஷா - போலியோவினால் வலது கால் பாதிக்கப்பட்டவர் - தனியார் வேலை வாய்ப்பகம் ஒன்றை ஆரம்பித்து பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

நாகராஜன் - பிறவியிலேயே கால்கள் வளர்ச்சி இல்லாதவர் - சுயமாக சைக்கிள் கடை வைத்துள்ளார்.

பர்ணபாஸ் - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - நூலகத்துறையில் B.Sc பட்டம், பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், அரசுப் பணியாளனாக அம்மாப்பேட்டை கிளை நூலகத்தில் நூலகராக பணியாற்றுகிறார்.

எஸ்.ஜெயக்குமார் - போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர் - B.Pharm பட்டப் படிப்பு படித்து, கீழ்ப்பாக்கம் mots மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றுகிறார்.

**********

இப்புத்தகம் பற்றி ஏகலைவன் கூறும்போது, தமிழகத்தில் உள்ள ஒன்றரை இலட்சம் ஊனமுற்றோரில், சாதாரணமானவர்களால் செய்ய முடியாத பல காரியங்களைச் செய்து பல ஊனமுற்றவர்கள் விளங்குவதாகவும், இதில் வெளச்சம் பட்டவர்கள் மட்டுமே வெளியுலகிற்கு அறிமுகமாகியுள்ள நிலையில், வெளிச்சம் படாத பலர் தங்கள் ஊனத்தைப் போலவே சாதனைகளையும் கூட முடக்கிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே உள்ளார்கள், இவர்களை வெளிக் கொண்டு வர ஊக்கப்படுத்தும் முகமாகவே தான் இந்நூலை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.

அவரை நாம் பாரட்டுகின்றோம்.

மேலை நாடுகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு பல விசேட சலுகைகள் உள்ளன, அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு வேண்டிய வசதிகைச் செய்து தருகின்றன. அங்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை பெற்றவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. உடல் ஊனமுற்றோர் அலுவலகங்களுக்கு சக்கர நாற்காலிகளில் தாமே வருவதற்குப் உதவியாக சாய்வான பாதைகள் உள்ளன. பல கல்லூரிகளில் உள்ள கேட்போர் கூடங்களில் நடைபெறும் கருத்தரங்கு அறைகளிலும் இவ் வசதி உண்டு.

இலங்கையில் உள்ள Dialog என்னும் செல்லிடப்பேசி நிறுவனம் வாய் பேசாத - காது கேளாதவர்களுக்கு எண்ணற்ற இலவச குறுஞ் செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஏற்ப இலவச சேவையை வழங்குகிறது. இதேபோல் தமிழ் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் நாட்டில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான உடல் ஊனமுற்றவர்கள் உள்ள நிலையில், அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர் வரும் 19.11.2006 அன்று சென்னையில் மாநாடும் பேரணியும் நடத்த உள்ளார்கள்.


ந.சி.கந்தையாபிள்ளை

2006-10-16 by விருபா - Viruba | 1 கருத்துகள்
ந.சி.கந்தையாபிள்ளை

அறிஞர் ந.சி.கந்தையா ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞர், தமிழிலக்கிய துறையில் சிறப்பாக செயலாற்றியவர். மிகச் சிறந்த படைப்பாளி, பல துறைகளில் நூல்களை எழுதிய தமிழர். தமிழ் இலக்கியங்களை, எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் வழங்கியது இவருடைய சிறப்பாகும். தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. மற்றைய அறிஞர்களால் எட்டப்படாத பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தை பெற்றார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன.


யாழ்பாணத்திற்கு அருகில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார் ந.சி.கந்தையா. அவ்வூரிலேய கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். பின்னர் மலேயாவில் பிருத்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். தாம் எழுதிய நூல்களை பதிப்பித்து வெளியிடுவதற்காக தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு வீரபாகுப் பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒற்றுமை நிலையம் மூலமாக தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன.

இவர் தனது 74 வது வயதில் 1967 இல் இலங்கையில் காலமானார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தாம் எழுதிய “புகழ் மலர்கள்” என்னும் நூலில் தமிழறிஞர் ந.சி.கந்தையா அவர்களைப் பற்றி பின்வருமாறு பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..

ந.சி.கந்தை யாஎனும் நல்லவன், வல்லவன்
தமிழ், தமி ழினவர லாறனைத் தையும்
தொல்பொருள் ஆய்வின் தொகைவகை விரிந்து
நிலநூல் கடநூல் சான்றுகள் நிறைத்தும்
தமிழ்நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும்
இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும்
பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும்,
வையம் வியக்க வரலா றெழுதினான்
பொய்அகன் றுமெய்க் கைஉ யர்ந்து
வாழ்க! ந.சி.கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
• பத்துப்பாட்டு
• பதிற்றுப்பத்து
• கலித்தொகை
• பரிபாடல்
• அகநானூறு
• புறப்பொருள் விளக்கம்
• கலிங்கத்துப் பரணி
• விறலிவிடுதூது
• பெண்கள் உலகம்
• பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
• பெண்கள் புரட்சி
• பொது அறிவு
• பொது அறிவு வினா விடை
• உலக அறிவியல் நூல்
• உங்களுக்குத் தெரியுமா
• அறிவுக் கட்டுரைகள்
• நூலகங்கள்
• அறிவு மாலை
• அறிவுரைக் கோவை
• தமிழர் சமயம் எது?
• சைவ சமய வரலாறு
• சிவன்
• இந்து சமய வரலாறு
• தமிழர் பண்பாடு
• நமது தாய்மொழி
• நமது மொழி
• நமது நாடு
• திராவிட மொழிகளும் இந்தியும்
• தமிழ்ப் பழமையும் புதுமையும்
• முச்சங்கம்
• தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
• ஆரியர் தமிழர் கலப்பு
• ஆரியத்தால் விளைந்த கேடு
• புரோகிதர் ஆட்சி
• இராமாயணம் நடந்த கதையா?
• ஆரியர் வேதங்கள்
• திராவிடம் என்றால் என்ன?
• திராவிட இந்தியா
• திராவிட நாகரிகம்
• மறைந்த நாகரிகம்
• ஆதி மனிதன்
• ஆதி உயிர்கள்
• மனிதன் எப்படித் தோன்றினான்?
• மரணத்தின் பின்
• பாம்பு வணக்கம்
• தமிழர் யார்?
• உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
• சிந்துவெளித் தமிழர்
• தென்னிந்நியக் குலங்களும் குடிகளும்
• தமிழர் சரித்திரம்
• வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்
• திருவள்ளுவர்
• திருக்குறள்
• தமிழகம்
• தமிழ் இந்தியா
• திருக்குறள் அகராதி
• தமிழ்ப் புலவர் அகராதி
• தமிழ் இலக்கிய அகராதி
• காலக்குறிப்பு அகராதி
• செந்தமிழ் அகராதி
• கலிவர் யாத்திரை
• இராபின்சன் குரூசோ
• அகத்தியர்
• தமிழ் ஆராய்ச்சி
• தமிழ் விளக்கம்
• நீதிநெறி விளக்கம்


சௌந்தர சுகன்

2006-10-07 by விருபா - Viruba | 1 கருத்துகள்
சௌந்தர சுகன்
1997 ஜூனில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 19 ஆண்டுகளாக வெளிவரும் இதழ் "சௌந்தர சுகன்" ஆகும்.

இதன் ஆசிரியராக சு.சௌந்தரவதனா உள்ளார்.


முகம்

2006-10-04 by விருபா - Viruba | 0 கருத்துகள்
முகம்

1983 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழ "முகம்" ஆகும். இதழின் முப்பு அட்டையில் பல்வேறு சாதனையாளர்களை வெளியிட்டு அச்சாதனையாளர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகளை வெளியிடப்படுகிறது. இதுவரையில் 213 சாதனையாளர்களைப் பற்றிய தகவல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆசிரியர் மாமணி அவர்கள் பல விருதுகள்ப் பெற்றவர், "கிந்தனார் பதில்கள்" என்று இவர் பதில்கள் மக்கள் பாராட்டைப் பெற்றவை. "கிந்தனார் பதில்கள்" தொகுக்கப்பட்டு தனிப் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

அண்மையில் முகம் மாமாணியாரின் பவழ விழா கொண்டாடப்பட்டது. அதில் பல்வேறு சாதனையாளர்கள், குறிப்பாக இளஞ் சாதனையாளர்கள் பாராட்டைப் பெற்றார்கள்.


இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For